நம்ப முடிகிறதா.. இதுதான் முதல் முறை.. மகாராஷ்டிராவின் லாத்துர் தொகுதியில் நோட்டாவுக்கு 2வது இடம்
மும்பை: மகாராஷ்டிராவில், பாஜக மற்றும் சிவ சேனா கூட்டணி ஆட்சியமைக்கும் அளவுக்கான இடங்களை வென்றுள்ளது. அதிலும் சிவ சேனா, கிங் மேக்கராக உருவாகியுள்ளது. ஆனால், ஒரு தொகுதியில், நோட்டாவைவிடவும் குறைவான வாக்குகளை, சிவ சேனா பெற்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.
இந்த விசித்திரத்தை நீங்களே பாருங்கள். மகாராஷ்டிராவின் லாத்தூர் தொகுதியில் 'மேலேயுள்ள யாருமே இல்லை' (நோட்டா) என்ற ஆப்ஷன், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிற வேட்பாளர்கள்
இங்கு காங்கிரசின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் இளைய மகன்,திரஜ் விலாஸ்ராவ் தேஷ்முக் 75.10 சதவீத வாக்குகளை மொத்தமாக தன்பக்கம் இழுத்து வெற்றி பெற்றுள்ளார். இதனால் மற்றவேட்பாளர்களுக்கு அடி மேல் அடி. நோட்டா 13.06% வாக்குகளைப் பெற்றது, சிவசேனா (4.7%) மற்றும் வஞ்சித் பகுஜன் அகாதி (4.9%) வாக்குகளை பெற்றன.
சிவ சேனா
வஞ்சித் பகுஜன் அகாதியின் மஞ்சக்ராவ் பலிராம் 4.94% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், சிவ சேனாவின் 'சச்சின்' ரவி ராம்ராஜே தேஷ்முக் 4.73% வாக்குகளையும் பெற்றார்.
நோட்டா ஓட்டு
நோட்டாவிற்கு மொத்தம் 19,133 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது வி.பி.ஏ, சிவ சேனா, மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (எம்.என்.எஸ்) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) பெற்ற வாக்குகளைவிட அதிகமாகும்.
எங்கே உள்ளது
மராத்வாடா பிராந்தியத்திலும், மகாராஷ்டிராவின் லாதூர் மாவட்டத்திலும் உள்ளது இந்த தொகுதி. கிராமப்புற தொகுதியான இங்கு பட்டியல் சாதியினரின் (எஸ்சி) மக்கள் தொகை 18.8%, பட்டியலின பழங்குடி (எஸ்டி) மக்கள் தொகை 1.71%. இந்த தொகுதி அடங்கிய மாவட்டத்தின் கல்வியறிவு நிலை 77.26% ஆகும்.