நம்பிக்கை இழக்கிறார்களா மக்கள் பிரதிநிதிகள்.. 5 வருடங்களில் 'நோட்டா' வாங்கிய ஓட்டுகளை பாருங்கள்
எந்த தேர்தல் பிரச்சாரமும் செய்யாமலே கடந்த 5 ஆண்டுகளில் நோட்டா கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்துள்ளது.
டெல்லி: எந்தத் தேர்தல் பிரச்சாரமும் செய்யாமலே வாக்குப்பெட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட நோட்டா 5 ஆண்டுகளில் 1.33 கோடி மக்களின் மனம் கவர்ந்து வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று வாக்காளர் தெரிவிக்கும் விதமாக வாக்குப் பெட்டிகளில் நோட்டா கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த அம்சத்தை தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டியில் சேர்த்தது. சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தலின் போது இது முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு மட்டும் 1,33,09,577 அதாவது சுமார் 1.33 கோடி வாக்குகள் கிடைத்திருக்கின்றன. டெல்லியில் இருந்து செயல்பட்டு வரும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நோட்டாவுக்கு அதிக வாக்குகள்
சட்டசபைத் தேர்தல்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சராசரியாக 2.70 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட போதும் 60,02,942 வாக்குகள் அதாவழ 1.08 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றது.
லட்சத்தீவில் குறைவு
இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தான் அதிக வாக்குகளாக 46,559 வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்துள்ளது. குறைந்தபட்சமான லட்சத்தீவில் 123 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது.
வாக்குகளை அள்ளிய நோட்டா
2017ல் கோவாவின் பானாஜி மற்றும் வால்போய் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நோட்டா மூன்றாவது இடத்தை பெற்றது. இரண்டு தொகுதியிலும் 1.94% மற்றும் 1.99% என்ற ரீதியில் நோட்டா வாக்குகள் பதிவாகியிருந்தன.
மக்களின் எதிர்ப்பு நிலைப்பாடு
மற்ற மாநில சட்டசபை தேர்தல்களிலும் நோட்டா அதிக அளவிலான வாக்குகளை பெற்றள்ளது. 2015ல் பீஹாரின் 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 2.08% வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. இதே போன்று டெல்லியிலும் 35,897 வாக்குகளை நோட்டா பெற்றதாக ஏடிஆர் கூறுகிறது.