5 மாநில சட்டசபை தேர்தல்.. இளஞ்சிவப்பு நிறத்தில் நோட்டா பொத்தான்
மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல் முறையாக எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான பொத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டா என்ற பொத்தானை அழுத்தி, அதனைப் பதிவு செய்யலாம். இந்த நோட்டா பொத்தான் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக நோட்டா பொத்தான் இடம் பெற்றுள்ளது. நோட்டா என்றே இடது ஓரம் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொத்தான் மீது மாநில மொழிகளில் நோட்டா என்று பெயர் பொறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவதால் நோட்டா பொத்தானும் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.