ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பாதிப்பை சொல்லக் கூடாது என சூரத் வர்த்தகர்களுக்கு அரசு மிரட்டல்- ராகுல்
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பாதிப்பை வெளியே சொல்லக் கூடாது என சூரத் வர்த்தகர்களுக்கு அரசு மிரட்டல்- ராகுல் பொளேர்
சூரத்: ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் குஜராத்தின் சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழில் முற்றாக முடங்கிப் போய்விட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சிக்கிறது.
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் மோசமாக பாதிப்படைந்துள்ள குஜராத் தொழிலாளர்களை தம்வசமாக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இதன் ஒருகட்டமாக சூரத் நகரில் இன்று பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் நிகழ்வை நடத்தினார் ராகுல் காந்தி.
தொழிலாலர்களுடன் சந்திப்பு
பின்னர் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சூரத் வர்த்தகர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:
ஜிஎஸ்டியால் பாதிப்பு
ஜிஎஸ்டியை தற்போதைய முறையில் அமல்படுத்தக் கூடாது என பிரதமர் மோடியையும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியையும் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் தற்போதைய நிலையிலேயே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சூரத் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உண்மையை சொல்லக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்தின் மீது தாக்குதல்
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை சூரத்தின் இரு கால்களையும் முறித்து போட்டுவிட்டதாக இந்த மக்கள் குமுறுகின்றனர். சூரத்தின் ஜவுளி தொழிலும் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் முடங்கிப் போய்விட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஓராண்டுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று.
தேசத்தை பாதுகாக்க
ஆகையால் இந்த நாளை கருப்பு தினமாக நாங்கள் அனுசரிக்கிறோம். ஜிஎஸ்டியை ஏன் அமல்படுத்தக் கூடாது என ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. சூரத்தையும் இந்த தேசத்தையும் பாதுகாக்க ஜிஎஸ்டி கூடாது என்கிறோம்.
அரசியல் அல்ல
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விவகாரம் அரசியல் அல்ல. இது காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான மோதல் அல்ல. இந்த நாட்டின் தொழிற்சாலைகளை வர்த்தகங்களை தயவு செய்து கொலை செய்யாதீர்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.