சுனாமியை விட மிக மோசமான பேரழிவு எது தெரியுமா.. ப.சிதம்பரம் அதிரடி!
சுனாமி பேரழிவை விட பணமதிப்பிழப்புதான் மிகப் பெரிய பேரழிவு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மும்பை: சுனாமியை விட மனிதனால் செய்யப்பட்ட பேரழிவு எது வென்றால் அது பணமதிப்பிழப்புதான் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் இரவை யாரும் மறக்க முடியாது. அன்றைய தினம்தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிவிடலாம் என்று கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்களும் தங்கள் அன்றாட பணிகளை விட்டுவிட்டு வங்கி வாயில்களில் காத்து கிடந்தனர்.
காத்திருக்கும்போது உயிரிழப்பு
வங்கி வாயில்களில் பெரும்கூட்டமாக மக்கள் காத்திருந்தபோது சில உயிரிழப்புகளும் நேர்ந்தன. மத்திய அரசின் இந்த செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
நவம்பர் 8 கருப்பு தினம்
இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியுடன் பணமதிப்பிழப்பு செய்து ஓராண்டு நிறைவடைகிறது. இதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளனர். இந்நிலையில் மும்பையில் சனிக்கிழமை நிகழ்ந்த இளைஞர் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
சுனாமியை விட பெரியது
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இது கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மிகப்பெரிய மோசடியாகும்.
விசாரணை நடத்தினால்
இந்த விவகாரத்தில் யாரேனும் விசாரணை நடத்தினால் உண்மை என்ன என்பது தெரியவரும். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை தடை செய்தது தவறு என்பதை நேர்மையாக ஏற்றுக் கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுக்கிறது. ஜிஎஸ்டியிலும் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையை ஏற்க மறுத்து தன்னிச்சையாகவே செயல்பட்டது.
மாற்றம் வரும்
வரும் 2019-ஆம் ஆண்டு மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொறுப்பேற்கும் புதிய அரசு ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வருவர் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.