கர்நாடகாவில் ரூ 36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது: 3 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் ரூ36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ரூ 25 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா துர்கா பகுதியில் நடந்த சோதனையில் ரூ11 லட்சம் என மொத்தம் ரூ 36 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பலர் வங்கியாளர்களின் உதவியுடன் கருப்புப் பணத்தை மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நவம்பர் 30 -ம் தேதி சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றின. மேலும் பெங்களூரில் 2 பொறியாளர்கள் மற்றும் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 4.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பழைய ரூபாய் நோட்டுகளாக 1.3 கோடி மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்த சூரஜ் சிங் என்பவரிடம் இருந்து ரூ25 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சூரஜ் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சித்ரா துர்கா பகுதியில் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் பெற்றுக்கொண்டு பணம் மாற்றித் தருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்குள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 15 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 11 லட்சம் இருந்தது. 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 3.90 லட்சம் இருந்தது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.