பதன்கோட்: சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. என்ஐஏ விசாரணையில் குர்தாஸ்பூர் எஸ்.பி.
பதன்கோட்: சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. என்ஐஏ விசாரணையில் குர்தாஸ்பூர் எஸ்.பி.
சண்டிகர்: பதன்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் எஸ்பி. நான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்தியப் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு அத்தனை தீவிரவாதிகளையும் தீர்த்துக் கட்டினர். பெரும் அசம்பாவிதத்தையும் இந்தியத் தரப்பு தடுத்து நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்பு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரான குர்தாஸ்பூர் எஸ்.பி. சல்வீந்தர் சிங் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சந்தேக மற்றும் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.
போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு
தற்போது போதைப் பொருள் கும்பல்களின் தொடர்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை அமைப்பு விரைவில் வி்சாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது.
குர்தாஸ்பூர் எஸ்.பியிடம் விசாரணை
இந்த நிலையில் குர்தாஸ்பூர் எஸ்.பி. சல்வீந்தர் சிங்கிடம் உண்மை அறியும் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியைப் பெற்றுள்ளது தேசியு புலனாய்வு ஏஜென்சி. அந்த விசாரணையின்போது மேலும் பல தகவல்களை பெற முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
சொல்வதற்கு ஒன்றும் இல்லை
இருப்பினும் நான் எனக்குத் தெரிந்த தகவல்கள் அனைத்தையும் சொல்லி விட்டேன். இதற்கு மேலும் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று இதுவரை நடந்த விசாரணைகளின்போது சொல்லி விட்டாராம். எனவே உண்மை கண்டறியும் சோதனையில் பெரிதாக எதுவும் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
உயிருடன் விட்டதால் சந்தேகம்
பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவி வந்த தீவிரவாதிகள் வரும் வழியில் சல்வீந்தர் சிங்கைக் கடத்திச் சென்றுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் யாரையும் உயிருடன் விட மாட்டார்கள். ஆனால் சல்வீந்தர் சிங்கை மட்டும் அவர்கள் காயம் கூட இல்லாமல் விட்டு விட்டனர். இதுதான் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்குச் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
சீக்கியர் என்பதால் விடுவித்தனர்
ஆனால் தான் ஒரு சீக்கியர் என்பதால் தீவிரவாதிகள் தன்னை விட்டு விட்டதாக சல்வீந்தர் சிங் கூறியுள்ளார். தனக்கும், தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
குழப்பத்தில் அதிகாரிகள்
ஆனால் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு இந்தப் பதிலில் திருப்தி இல்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிங்கை சாட்சியாக சேர்ப்பதா அல்லது குற்றவாளியாக சேர்ப்பதா என்ற குழப்பமும் புலனாய்வு அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம்.