திருமண ரிசப்ஷனில் கெட்டுப்போன ஐஸ் கட்டியில் ஜூஸ்... 50 பேருக்கு மஞ்சள் காமாலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கெட்டுப்போன நீரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டியில் ஜூஸ் தயாரித்துக் கொடுத்ததால், 50க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு ஆளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வள்ளிக்கொண்ணு என்ற இடத்தில் பஷீர் என்பவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது. அதில் குளிர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட ஐஸ்கட்டிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தவைகள் அல்ல எனக் கூறப்படுகிறது.
மீன் வர்த்தகத்தில் மீன்கள் விரைவில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப் படும் ஐஸ் கட்டிகள் அவை. சுத்தம் செய்யப்படாத நீரால் தயாரிக்கப்பட்டவை. அவற்றை மனிதர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆனால், விலை குறைவாக கிடைக்கிறது என்பதால், திருமண வீட்டார் அவற்றை வாங்கி பழரசம் தயாரித்துள்ளனர்.
இதனால், திருமணம் முடிந்த சில வாரங்களில் விருந்தில் கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்து உடல்நலப் பாதிப்பால் அவதிப்படத் தொடங்கினர். நூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறச் சென்றதில், அவர்களில் 50க்கும் மேற்பட்டோருக்கும் மஞ்சள்காமாலை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை மேற்கொண்ட விசாரணையில் பயன்படுத்தக் கூடாத ஐஸ் கட்டிகளை கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் ஜூஸ் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பஷீரின் குடும்பத்திற்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.