வெளிநாட்டு நிதி: 10,331 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
டெல்லி: வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதி நிதி உதவி குறித்த கணக்கு தாக்கல் செய்யாத 10,331 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் 1,108 தமிழக என்.ஜி.ஓ நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை வரவு செலவு தாக்கல் செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் 10,331 தன்னார்வ தொண்டு நிறுவனங்ககள் தொடர்ந்து 3 ஆண்டுகள் தொடர்ந்து கணக்ககு தாக்கல் செய்யாதது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த 1,108 தன்னார்வ அமைப்புகள் உட்பட 10,331 அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்டுள்ள அரசுசாரா அமைப்புகள் எவ்வித வரவு செலவு இல்லாவிட்டலும் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் என்பது நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விதியை பின்பற்றாதது குறித்தும், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ள உள்துறை அமைச்சகம் விதிமீறலுக்காக அரசு சாரா அமைப்புகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.