ரயில் புறப்படும் 30 நிமிடம் முன்பு வரை இனி டிக்கெட் ரிசர்வேசன் செய்யலாம்: இன்று முதல் அறிமுகம்
டெல்லி: ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை முன் பதிவு செய்யும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. இது தவிர ரயில் பயணிகள் அட்டவணையை தயார் செய்வதிலும் சில மாற்றங்களை செய்வதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ஒரு அட்டவணையும் அரை மணி நேரத்துக்கு முன்பு ஒரு அட்டவணையும் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் இட வசதி இருப்பதை பொறுத்து முதல் அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்பும் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் ரிசர்வேசன்
ரயிலில் பயணிக்க120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால், சுமார் 4 மாதம் முன்பே பயணத்தை திட்டமிடுபவர்களுக்கே ரயில் டிக்கெட் உறுதியாக கிடைக்கிறது. அதிலும் முக்கிய வழித்தடங்களிலும், முகூர்த்த நாட்களிலும் திடீர் பயணம் செய்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைப்பது அரிதாகி விடுகிறது. இந்த நிலையை மாற்றி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி இன்று அமலுக்கு வருகிறது. பொதுவாக ரயில்களில் சார்ட் வெளியிடப்பட்டதும் முன்பதிவு செய்ய இயலாது. ஆனால் புதிய முறையில் இரண்டு விதமாக சார்ட் வெளியிடுகிறது இந்தியன் ரயில்வே.
பயணிகளுக்கு வசதி
4 மணி நேரத்துக்கு முன்பே பயண அட்டவணை தயார் செய்வதால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் தங்களது இருக்கை நிலையை அறிந்து அதற்கேற்ப பயணத்தில் மாற்றங்கள் செய்ய முடியும் எனவும், இதனால் பயணிகளுக்கு வசதி என்பதுடன் ரயில்வேயின் வருமானமும் அதிகரிக்கும் என ரயில்வேதுறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ரயிலில் பயண அட்டவணை தயாரிப்பது தாமதமாவதால் கடைசி நேரத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வெளியான நிலையில் இப்புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு ரத்து
ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான ரத்துக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவில் தரகர்கள் ஆதிக்கம் மற்றும் முறைகேடுகளை தடுக்க மற்றொரு வழிமுறையை ரயில்வே இன்று அமல்படுத்துகிறது. இதன்படி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு ரத்து கட்டணம் இரு மடங்கு ஆகிறது.
இருமடங்காக உயர்வு
ரயில் புறப்பட 48 மணி நேரம் முன்பு டிக்கெட் ரத்து செய்தால் 2ம் வகுப்பு இருக்கை வசதிக்கு 30 ல் இருந்து 60ஆகவும், 3 அடுக்கு ஏசி பெட்டிக்கு 90ல் இருந்து 180ஆகவும், 2ம் வகுப்பு படுக்கை வசதிக்கு 60ல் இருந்து 120ஆகவும், 2ம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 100ல் இருந்து 200 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
பணம் திரும்ப கிடைக்காது
ரயில் புறப்பட 4 மணி நேரம் முன்பு (முதல் சார்ட் தயாராவதற்கு முன்பு) டிக்கெட் ரத்து செய்தால்தான் கட்டணம் திரும்ப அளிக்கப்படும். அதன்பிறகு ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது. ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரயில் கிளம்ப அரைமணி நேரம் முன்பு ரத்து செய்தால்தான் கட்டணம் திரும்ப கிடைக்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.