இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை!
டெல்லி : வாடிக்கையாளரின் வசதிக்காக வெளியூர் அழைப்புகளை எளிமையாக்கியுள்ளன முக்கிய செல்போன் நிறுவனங்கள். இதன்படி, இனி வெளியூர் அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடத் தேவையில்லை.
தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், செல்போன் எண்ணை மாற்றாமல் மொபையில் ஆபரேட்டரை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யும் வசதியை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கு மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியை பயன்படுத்த முடியாது. இதற்குக் காரணம் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடவேண்டியிருப்பது தான்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த தடையை நீக்கும் படி, தொலைத்தொடர்பு துறை, மொபைல் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. அதோடு, வரும் ஜூலைக்குள் அதனை செய்து முடிக்கவும் காலக்கெடு விதிக்கப் பட்டது.
இதன்படி, ஏர்டெல், வோடபோன், எம்.டி.என்.எல். போன்ற முக்கிய நிறுவனங்கள் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
மற்ற நிறுவனங்களும் ஜூலை மாத முடிவிற்குள் இந்த தடையை நீக்கி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.