வால்மீகி பற்றி சர்ச்சை பேச்சு.. இந்தி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி கைது!
ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புகாரில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ராக்கி சாவந்தை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தி பட உலகில் தனது படுபயங்கர கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை ராக்கி சாவந்த் தவிர்த்து வந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி ராக்கி சாவந்திற்கு கைது வாரன்ட் பிறப்பித்து லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பஞ்சாப் போலீசார் இன்று மும்பை வந்தனர். அவர்கள் ராக்கி சாவந்தை இன்று கைது செய்தனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.