இப்பலாம் பொண்ணுங்க கூட பீர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கவலை!
பெண்கள் பீர் குடிப்பது கவலை அளிப்பதாகக் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா: ''மச்சி கோவா ஒரு ஃபாரின் நாடுடா'' என்று கோவா படத்தில் ஜெய் வைபவிடம் கூறுவார். அந்த அளவிற்கு அந்த மாநிலம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும்.
முக்கியமாக அங்கு இருக்கும் மது வகைகளும் இதற்கு ஒரு காரணம். மிக எளிதாக அங்கு எல்லா விதமான போதை பொருட்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அதுவே அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கஷ்டத்தை உருவாக்கி இருக்கிறது. முக்கியமாகப் பெண்கள் பீர் குடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்றுள்ளார்.
போதைப் பொருள்
மனோகர் பாரிக்கர் முதலில் போதை பொருள் பழக்கம் குறித்துப் பேசினார். அதில் கோவாவில் கொடுரமான போதைப் பொருட்கள் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றார். இது கோவா மக்களை மட்டும் இல்லாமல் வெளிநாட்டுப் பயணிகளையும் அதிகம் பாதிக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கட்டுப்படுத்த முடியவில்லை
மேலும் ''கோவாவில் இதற்கு எதிராகப் பல நடவடிக்கை எடுத்தும் போதை பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் தற்போது இதற்கான சிறப்பு போலீஸ் படைகளை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை முடிவிற்குக் கொண்டு வருவோம்'' என்றுள்ளார்.
15 பேர் கைது
முக்கியமாக ''இதுவரை இந்தப் பிரச்சனையின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது. கோவாவில் போதை பொருள் பயன்படுத்தினால் இன்னும் மோசமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுப்பழக்கம்
அதேபோல் ''இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்கள் கூட பீர் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது மனதிற்கு மிகவும் கஷ்டத்தை தருகிறது. இந்தியா தனது சகிப்புத்தன்மையை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது'' என்றுள்ளார்.