ஒரே போன்... இனி, ஓடும் ரயிலிலும் சூடாக பீட்சா சாப்பிடலாம்!
டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் போதே, பயணிகள் தங்கள் இருக்கைக்கே பீட்சாவை ஆர்டர் செய்து பெறும் வசதியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
ரயில் பயணங்களில் தமக்குப் பிரியமான பீட்சாவைச் சாப்பிட முடியவில்லையே என்ற கவலை இனி பயணிகளுக்கு இல்லை.காரணம் பயணிகள் தங்கள் இருக்கைக்கே பீட்சாவை வரவழைத்துச் சாப்பிடும் இ-கேட்டரிங் வசதியைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி நிறுவனம்.
இதற்காக, டோமினோ பிஸ்சா நிறுவனத்தினுடன் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே ஆன்லைன் அல்லது போன் மூலமாக பயணிகள் பீட்சா ஆர்டர் செய்யலாம்.
பயணிகளின் இருக்கை எண் விபரத்தை தந்து விட்டால் போதும், அடுத்துள்ள ஸ்டேஷனில் சூடான பீட்சா அவர்களது இருக்கைக்கே வந்து சப்ளை செய்யப் படும்.
இந்த வசதி முதல்கட்டமாக ஆக்ரா, அல்வார், அம்பாலா, ஜலந்தர், மதுரா, முசாபர்நகர், பதன்கோட், வாபி, பரூச் மற்றும் வதோரா ஆகிய ரயில் நிலையங்களில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
விரைவில் இந்த சேவை விரிவு செய்யப்படும் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.