அதிகரிக்கும் ‘கடிகள்’.. தெருநாய்களைக் கொன்றால் ‘கோல்ட் காய்ன்’.. கேரள மாஜி மாணவர்கள் அறிவிப்பு
திருவனந்தபுரம்: அதிகரித்து வரும் தெரு நாய்த் தொல்லையைப் போக, அதிகளவில் நாய்களைக் கொல்லும் பஞ்சாயத்து, நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் என கேரளாவில் முன்னாள் மாணவர் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
கேரளாவில் சமீபகாலமாக நாய்க்கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நாய்க்கடியால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், 701 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இவர்களில் 175 பேர் குழந்தைகள் ஆவர்.
இந்த ஆண்டு மட்டும் கேரளா முழுவதும் 53 ஆயிரம் பேர் நாய்க்கடிக்குச் சிகிச்சை பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வர்க்கலா பகுதியில் நாய்களால் கடித்து காயமடைந்த ராகவன் என்ற 90 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெருநாய்கள் தொல்லை...
இப்படியாக நாள்தோறும் நாய்க்கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. அதிகளவில் தெரு நாய்கள் சுற்றுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே தெருநாய்களை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தங்க நாணயம் பரிசு...
இந்நிலையில், தெரு நாய்களை அதிக அளவில் கொல்லும் பஞ்சாயத்து, நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் என கேரளாவின் செயின்ட் தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக ஏர் கன்னும் வழங்க இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
பணம் வசூல்...
இதற்காக இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் 1200 பேரிடமிருந்து பணம் வசூலிக்கப் பட்டு தங்க நாணயங்கள் வாங்கப்பட உள்ளதாக இந்த அமைப்பின் செயலாளர் ஜேம்ஸ் பம்பயக்கால் தெரிவித்துள்ளார்.
கடைசித் தேதி...
தகுதியான பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகள் நாள்தோறும் கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை விவரத்தை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கு கடைசித் தேதி வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி ஆகும்.
புள்ளி விபரம்...
கேரளாவில் கடந்த 2013-ம் ஆண்டு 88,172 பேரும் 2014-ல் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 119 பேரும், 2015ல் இந்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 156 பேரும் நாய்க்கடிக்கு ஆளாகியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.