பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை: மீண்டும் சர்ச்சையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: பாலியல் கல்வி பள்ளிகளில் தடை செய்யப்படவேண்டும் என்று
மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பரபரப்பு கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த ஆணுறை அணியுங்கள் என்று பிரச்சாரம் செய்வது மலிவானது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன், தற்போது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
பாலியல் கல்விக்குத் தடை
டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு, கல்வி குறித்த தனது பார்வையை அவர் தனது வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் பாலியல் கல்வி பள்ளிகளில் தடை செய்யப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பாடத்திட்டம் மாறவேண்டும்
மேலும் இந்திய கலாசார தொடர்பு குறித்து மதிப்புமிக்க கல்வியை உள்ளடக்கம் கொண்ட பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும் என அதில் தெரிவித்திருக்கிறார்.
ஒருவனுக்கு ஒருத்தி
ஏற்கனவே எய்ட்ஸ் நோயை தடுக்க இந்திய கலாச்சாரத்தின்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும் என்ற நியதியை கடைபிடிக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அந்த நியதியை கடைபிடித்து நம்பகத்துடன் செயல்பட்டால் எய்ட்ஸ் நோய் உருவாகாமல் தடுக்கமுடியும் என்றார் அவர்.
அரசாங்கத்தின் பிரசாரம்
மாறாக தவறான பாலியல் உறவில் ஈடுபடும்போது ஆணுறை உபயோகியுங்கள் என்று அரசாங்கமே கூறுவது, தவறான செயலை ஆதரிப்பது போல் உள்ளது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.