அன்னை மகளே அரசியலுக்கு வருக.. பிரியங்காவுக்கு மீரா குமார் ஆதரவு
பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது காங்கிரஸ். இதனால், காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைமை தேவை என அக்கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
சமீபத்திய தேர்தல் தோல்விகளின் போது காங்கிரஸ் தொண்டர்கள் இதையே வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக பெங்களூரு வந்திருந்த லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் மீரா குமார். அப்போது அவர் கூறியதாவது :-
‘அனைத்து ஜாதியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதுபோன்ற கொள்கை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. ஓட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை.தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது தாற்காலிக பின்னடைவாகும்.
இந்த சந்தர்ப்பத்தில், பிரியா முழுநேர அரசியலில் ஈடுபட்டால் காங்கிரசுக்கு பலமாக அமையும்.சோனியாவை போல பிரியங்காவுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது. சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை பிரியங்கா திறம்பட நிர்வகித்து வருகிறார். முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன்' என்றார்.