ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்... ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினரும் போராட்டம் நடத்த முடிவு
டெல்லி : ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் தங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என துணை ராணுவத்தினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் நவம்பர் 2 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரே பதவியில் வேலை செய்தவர்களுக்கு மாறுபட்ட ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்காக ரூ. 500 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் சரியாக வகுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் குறித்து எந்த அறிவிப்பையும் புதிய அரசு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த மாதம் டெல்லியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இதன்பின்னர் மத்திய அரசு இறங்கிவந்தது. ஒரே பதவி ஓரே ஓய்வூதிய திட்டம் கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என அண்மையில் அறிவித்தது. அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ராணுவத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். துணை ராணுவத்தில் மத்திய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் படை என பல பிரிவுகள் உள்ளன.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வரும் நவம்பர் 2 ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது சுமார் 9 லட்சம் முன்னாள் துணை ராணுவத்தினர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இதில் 3 லட்சம் பேர் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்துக்கு தகுதியானர்வர்கள்.
ராணுவத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தியதால் மத்திய அரசுக்கு ரூ. 8 ஆயிரத்து 300 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டது. துணை ராணுவத்தினருக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டால் ரூ. 3 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.