லோக்சபா நேரம் முடியட்டும்.. கார்கேவை கட்டிபிடிக்கிறேன்.. ராகுல் காந்தி செயலுக்கு ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: லோக்சபாவில் இன்று அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
பசு தொடர்பான கூட்டு வன்முறை பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுபோன்ற வன்முறைகள் துரதிருஷ்டவசமானதுதான். மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைதான் இந்த நாட்டின் மிகப்பெரிய கூட்டு படுகொலை.
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் இந்தியாவை பார்த்து கூறியுள்ளனர். 2030க்குள் பொருளாதாரத்தில் வளர்ந்த முதல் 3 நாடுகளுக்குள் இந்தியா வரும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள எதிர்கட்சிகள் மறுக்கின்றன என்பதே உண்மை.
சில எம்பிக்கள் இந்தியா, இந்து தாலிபான் நாடாக மாறிவிடும், இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றெல்லாம் கூறியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அடைய விரும்புவது என்ன (இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசியபோது இந்த கருத்தை கூறியிருந்த சசிதரூர், அவையில், சிரித்தபடி இருந்தார்).
ஆந்திரா இந்த நாட்டின் ஒரு பகுதி. மத்திய அரசு எந்த அளவுக்கு உதவிகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் ஆந்திராவுக்கு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமரை கட்டிபிடித்த செயல் சரியல்ல என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறிய கருத்தை எதிர்த்து பேசிய, காங். குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அரசியல் எதிராளியை கட்டி பிடிக்க கூடாதா என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜ்நாத்சிங் தனது உரையின்போது, வெவ்வேறு அரசியல் கட்சியினர் கட்டிப் பிடிப்பதில் தப்பில்லை. அவை நேரம் முடிந்த பிறகு நான் மல்லிகார்ஜுன கார்கேவை கட்டிப்பிடிக்க தயார் என்றார்.