சர்ச்சையில் சிக்கிய ம.பி. பாஜக முதல்வர் சிவராஜ் சிங்… ஆடியோ டேப் வெளியானது
போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சிவராஜ் சிங் சவுகானும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி என்பரிடம் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், அந்த மண்டசூர் மாவட்டம், கரோத் சட்டசபை இடைத் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு இன்னொரு பாஜக தலைவர் ராஜேந்திர செளத்ரியிடம் கூறுகிறார் முதல்வர் செளகான். அப்படி செய்தால் அரசாங்கத்தில் அவருக்கு நல்ல தொரு பதவி தரப்படும் என்றும் உறுதியளிக்கிறார். இந்த ஆடியோ வெளியாகி அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கரோத் இடைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி போலி என்கவுண்டர் வழக்கில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, சுரங்க மோசடி வழக்கில் எடியூரப்பா போன்றவர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இதேபோல, இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல், பாஜக பெண் தலைவர்கள் சமீபகாலமாக கடும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் லலித் மோடி விவகாரத்தில் மதிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பட்டப்படிப்பு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, கடலைமிட்டாய் காண்ட்ராக்ட்டில் பங்கஜா முண்டே என பாஜகவின் பெண் பிரபல தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மற்றொரு பாஜக தலைவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கி உள்ளது. தொடர்பாக கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் உடனடியாக சிவராஜ் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் திக் விஜய் சிங் டர்ட்டி பாலிடிக்ஸ் நடத்துவதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆடியோ விவகாரம் சாதாரணமானது என்று தெரிவித்துள்ளனர்.