105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் கவர்னரின் முடிவுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன.
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இரண்டு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதையே அனைத்து தரப்பும் எதிர்நோக்கியுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு, ஒரு சுயேச்சை ஆதரவு அளித்துள்ளார்.
அதன்படி, 105 பேர் ஆதரவு உள்ளதாகவும், தனிப்பெரும் கட்சி என்றும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 38 மற்றும் சுயேச்சை என, 117 பேரின் ஆதரவு உள்ளதாக மஜத, காங்கிரஸ் கூட்டணி முதல்வராக நிறுத்தியுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.
இரு தரப்பும், ஆளுநர் வாஜூபாய் வாலாவை இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளன.
இனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் கையில்தான் உள்ளது. 105 பேர் ஆதரவு உள்ள தனிப் பெரும் கட்சியா அல்லது, 117 பேரின் ஆதரவு உள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி கட்சியா, யாரை ஆட்சி அமைக்கப் போகிறார் என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.