இன்று செவ்வாயில் மழை... புதனில் வெயிலடிக்கும்... இனி ‘இடி அமீன்’ இப்படி செய்தி வாசிப்பார்!
டெல்லி: இப்போது நம்மவர்கள் சொல்லும் வானிலை முன்னறிவிப்புகள் பல சொன்னபடி இருப்பதில்லை. இந்த லட்சணத்தில் செவ்வாய் கிரகம், புதன் கிரகம் உள்ளிட்ட வெளி கிரகங்களுக்கும் வானிலை முன்னறிவிப்பு சொல்லப் போகிறார்களாம்.
அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது பாஸ். காலையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மதியம் மழை வரும். மாலையில் வெயில் அடிக்கும் என்று நம்ம ஊருக்கு சொல்வது போலவே இனி பிற கிரகங்களுக்கும் சொல்ல முடியுமாம்.
கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி உதவியுவடன் இதை சாத்தியமாக்கப் போகிறார்களாம் விஞ்ஞானிகள்.
புதிய கண்டுபிடிப்பு...
இதுகுறித்த ஆய்வு ஒன்றில் டோரன்டோ பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், க்வீன்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டு வந்தன. அந்த ஆய்வில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்ச்சியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நல்ல வெயில்...
இவர்கள் ஆய்வு செய்த கிரகங்களில் காலையில் நான்கு கிரகங்களில் மேகமூட்டமாக இருந்ததையும், இரண்டு கிரகங்களில் நல்ல வெயில் அடித்தயைும் காண முடிந்ததாம்.
துல்லியமாக...
தங்களது நட்சத்திரத்தை சுற்றி வரும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்து அவற்றில் நிலவும் கால நிலையை நாங்கள் உறுதி செய்ய முடிந்தது. மேலும் இரவு பகல் நேரத்தையும் கூட துல்லியமாக அவதானிக்க முடிந்தது என்று கூறுகிறார் குழுவில் ஒருவரான லிசா எஸ்டீவஸ்.
ஆய்வு...
இவர்கள் கெப்ளர் 7பி, கெப்ளர் 8பி, 12பி, 41பி, 76பி, ஹாட் பி 7பி ஆகிய கிரகங்களை தங்களது ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
கடிகார முள் கோணம்...
நமது சூரியக் குடும்த்தில் உள்ள கிரகங்கள் பெரும்பாலும் கடிகார முள் கோணத்தில்தான் சுற்றி வருகின்றன. இதனால் கிரகங்களின் தரைப்பரப்பில் கிழக்கு நோக்கிய காற்று வீசுகிறது. இதன் காரணமாக இரவில் குளிரும் பகலில் வெம்மையும் ஏற்படுகிறது.
மற்ற கிரகங்களின் தட்பவெப்பம்...
தற்போதைய ஆய்வு மேலும் மேம்பட வேண்டியுள்ளது. அது மேம்பட்டால் பூமியில் இருந்தபடியே பிற கிரகங்களின் தட்பவெப்ப நிலையை அறிந்து முன்னறிவிப்பும் செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.