ஏர்போர்ட் அதிகாரியிடம் வாக்குவாதம்.. தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டிக்கு 7 விமான நிறுவனங்கள் தடை
விமான நிலைய அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டிக்கு 7 விமான நிறுவனங்கள் பயணிக்க தடை விதித்துள்ளன.
விசாகப்பட்டினம்: விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.பி. திவாகர் ரெட்டிக்கு 7 விமான நிறுவனங்களில் பயணிக்க தடை விதித்துள்ளன.
அனந்தபூர் எம்.பி.யான திவாகர் ரெட்டி நேற்று காலை இன்டிகோ விமானத்தில் ஹைதராபாத் செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தார். பொதுவாக விமான போக்குவரத்து இயக்கக விதிகளின் படி விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் சோதனை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்திருக்க வேண்டும்.
ஆனால் எம்.பி. திவாகர் ரெட்டியோ 28 நிமிடங்கள் தாமதமாக வந்தார். இதனால் அவர் போர்டிங் பாயின்ட்டுக்கு விமான அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்டிகோ விமான நிறுவனங்களில் அவர் பயணிக்க தடை விதித்தது அந்த நிறுவனம். அதே நாளில் ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்களும் அவருக்கு தடை விதித்தது.
பின்னர் வெள்ளிக்கிழமை காலை ஏர் ஏசியா, கோ ஏர், ஜெட் ஏர்வேஸ் மற்றும் விஸ்டாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மொத்தம் அவர் 7 விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் பயணிக்க தடை விதித்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராவும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். அவர் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி.யே இவ்வாறு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்வாட் பிஸினல் வகுப்பு தரவில்லை என்பதற்காக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியரை தாக்கியதால் அவருக்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.