54 வயசுக்குள் பி.எப் பணத்தை எடுக்க வேண்டும்... இல்லாவிட்டால் 57 வயது வரை வெயிட் பண்ணனும்!
டெல்லி: பிஎப் பணத்தை 54 வயதுக்குள் எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், 57 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும். இடையில் எடுக்க முடியாது என்று தொழிலாளர் சேம நல நிதி நிறுவனமான இபிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரிஷ்டா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தின் கீழ் பணம் முதலீடு செய்து வருவோருக்கும் இது பொருந்தும் என்றும் அது கூறியுள்ளது.
முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் சேம நல நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது பி.எப். கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் பி.எப் கணக்கின் நடைமுறை.
பி.எப் கணக்கில் உள்ள தொகை வங்கிக் கணக்கு போல பாவிக்கப்பட்டு அதற்கு வட்டியும் ஆண்டுக்காண்டு சேர்க்கப்படும். மேலும் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப அந்த தொகையிலிருந்து மருத்துவம், திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
நிறுவனத்திலிருந்து விலகிவிட்டால் பிஎப் கணக்கின் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்.
மாற்றம்...
இல்லாவிட்டால், முன்பு 54 வயதாகும் தனது சேம நல நிதியிலிருந்து 90 சதவீத பணத்தை ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை இருந்தது. மேலும் மீதமுள்ள பணம், ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு செட்டில் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய விதிகள்...
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘54 வயதுக்குள் தற்போது ஒருவர் தனது பிராவிடன்ட் பன்ட் பணத்தை எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் அவர் அடுத்து தனது 57வயது தொடங்கியவுடன்தான் எடுக்க முடியும். இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை புதிய விதிகளை வெளியிட்டுள்ளது' என்றார்.
நேரடியாக விண்ணப்பிக்கலாம்...
மேலும் இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால் பிஎப் சந்தாதாரர்கள் தங்களதுப் பணத்தை பெற்றுக் கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம். முன்பு இதற்கு தாங்கள் பணியாற்றிய அல்லது பணியாற்றி வரும் நிறுவனத்தின் அட்டஸ்டேஷன் தேவைப்பட்டது. இனிமேல் அது தேவையில்லை.
எளிய நடைமுறைகள்...
முன்னதாக பிஎப் சந்தாதாரர்களுக்கு யுனிவர்சல் கணக்கு எண்ணை பிஎப் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.