ஆந்திராவில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம்: ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்
Recommended Video
கடப்பா: ஆந்திராவில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை (என்.ஆர்.சி) அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். ஆனால் தங்களது மாநிலங்களில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம் என பல மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் என பலரும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவி ஏற்கும் ஹேமந்த் சோரனும் என்.ஆர்.சியை அமல்படுத்தமட்டோம் என கூறியுள்ளார். மேலும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரிலும் என்.ஆர்.சியை அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
அதேபோல் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பிஜேடியின் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக்கும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் என்.ஆர்.சியை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடப்பாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, என்.ஆர்.சி. குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிறுபான்மை சகோதரர்கள் எனக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
என்.ஆர்.சியை ஆந்திராவில் அமல்படுத்தப்போவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். என்.ஆர்.சி.க்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
ஏற்கனவே துணை முதல்வர் அஸ்மத் பாஷா, முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் ஆதரிக்க மாட்டோம் என கூறியுள்ளார். நாங்கள் சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாகவே இருப்போம் என்றார்.
லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.