குஜராத்தில் பாடகர் மீது ரூ.4.5 கோடி பணத்தை மழையாக கொட்டிய என்.ஆர்.ஐ.
அகமதாபாத்: குஜராத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடகர் க்ரிதிதான் காத்வியின் பாடலை கேட்டு அசந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் ஒருவர் மேடையில் ரூ.4.5 கோடி பணத்தை பறக்கவிட்டார்.
குஜராத்தைச் சேர்ந்தவர் க்ரிதிதான் காத்வி. பிரபல நாட்டுப்புற பாடகர். அவர் கிளாசிக்கல், கசலும் பாடுவார். குஜராத்தில் காத்விக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜாம்நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் காத்வி கலந்து கொண்டு பாடினார்.
மேடையில் அவர் பாடியதை கேட்டு அசந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் போல. உடனே அவர் ரூ.4.5 கோடி பணத்தை மேடையில் காத்வி அமர்ந்திருந்த இடத்தில் பண மழையாக பெய்யச் செய்தார்.
காத்வியை சுற்றி நின்ற ஆட்கள் பணத்தை பறக்க விட அந்த மேடையே பண மேடையாக ஆகிவிட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கோடிக் கணக்கில் பண மழை கொட்டியதை கண் இமைக்காமல் பார்த்தனர். மேடையில் பறக்கவிடப்பட்ட பணத்தை வைத்து இந்தியாவில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிவிடலாம்.
இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.