வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது தூதுவர்கள்.. மோடி புகழாரம்
வாரணாசி:வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது நாட்டின் திறமையை பறைசாற்றும் தூதுவர்கள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வந்துள்ளனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போ அவர் பேசியதாவது:
ஒரே உலகம், ஒரே திட்டம்
சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பின் வழியாக ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக உள்ளது.
பாஸ்போர்ட் சேவா திட்டம்
கடந்த நான்கரை ஆண்டுகளில் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி உள்ளோம். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை விரைந்து பெற, உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களோடு, பாஸ்போஸ்ட் சேவா திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தூதுவர்கள்
தற்போது மற்றொரு திட்டமாக, மின்னணு பாஸ்போர்ட் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நமது நாட்டின் எண்ணங்களை வெளிப்படுத்தும் தூதுவர்களாக காண்கிறேன். அவர்கள் இந்தியாவின் திறமையையும், திறனையும், உலகிற்கு வெளிப்படுத்தும் தூதுவர்கள்.
உயர்ந்த பதவிகளில் உள்ளனர்
இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர். குறிப்பாக மொரிஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.
ராஜீவ் சொன்னது என்ன?
காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டும் சென்று சேர்கிறது. மற்றவை இடையில் இருப்பவர்கள் எடுத்து கொள்கிறார்கள் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
100 சதவீதம் கொள்ளை
ஏறக்குறைய 85 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின் 100 சதவீதம் முழுவதுமாக கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் கோடியை பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.
நோக்கம் இல்லாத அரசு
பழைய முறையில் ஒருநாட்டை நிர்வகித்து இருக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். ரூ.4.50 லட்சம் கோடி காணாமல் போய் இருக்கும். பாஜக ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்குச் சென்று சேரும் பணம், இடைத் தரகர்களுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசுகள் இதைச் செய்து இருக்கலாம், ஆனால், அவர்களுக்கோ நோக்கமும் இல்லை, சக்தியும் இல்லை என்று பேசினார்.