பயங்கரவாதம் குறித்து பகிரங்கமாக ஷிண்டே பேசினால் தப்பு.. 'ரா' தலைவர் பேசினால் சரியோ?
லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஊடகங்கள் முன்னிலையில் விவாதித்த ஒற்றை காரணத்துக்காக போட்டுத் தாக்கியிருந்தார் பிரதமர் மோடி..
அத்துடன் அமெரிக்கா நாட்டவர், ஒசாமா பின்லேடனை வீழ்த்துவது தொடர்பாக ஊடகங்களில் எல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தார்களா என்ன? என்றும் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.. இதோ ஓராண்டு கடந்துவிட்டது..
இப்போது ஷிண்டே இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதுதான்.. ஆனால் அன்று ஷிண்டே செய்தியாளர்கள் முன்னிலையில் தாவூத் இப்ராகிமை கொண்டு வருவது பேசிவிட்டார் என்பதற்காக கொந்தளித்தவர்கள் இன்று ஊரையும் உலகத்தையும் கூட்டி ராஜஸ்தானின் ஜோத்பூரில் பயங்கரவாதம் தொடர்பாக பகிரங்கமாக விவாதிக்கிறார்கள்...
இந்த பயங்கரவாதம் தொடர்பான கருத்தரங்குக்கு ராஜஸ்தான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அம்மாநில அரசுடன் இந்தியா பவுண்டேஷன், சர்தார் படேல் பல்கலைக் கழகம், பாதுகாப்பு, கிரிமினல் நீதி ஆகிய அமைப்புகளும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகின்றன.
ஜோத்பூரில் 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கை நாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்துள்ளார். இக்கருத்தரங்கில் ஏராளமான மத்திய அமைச்சர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர்.. ஏன் நமது நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கருத்தரங்கை நடத்துகிற இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான அவரது மகன் செளர்யா தோவல் ஆகியோரும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர்..
அத்துடன் பாதுகாப்பு வல்லுநர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என பல நாடுகளில் இருந்தும் இக்கருத்தரங்குக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இக்கருத்தரங்கின் நோக்கம் என்பதே பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.. அன்று தாவூத் இப்ராகிமை கொண்டு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஷிண்டே பேசிவிட்டார் என்பதற்காக கொந்தளித்த மோடி, இன்று அவரது தலைமையிலான அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குடும்பத்தினர் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக விவாதிப்பது பற்றி என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் பிரதான கேள்வி.
ஒருநாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு பற்றி ஏதோ ஒரு நாட்டின் தனிநபர்கள் முன்வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு வியூகங்களை உள்வாங்கிக் கொள்வதுதான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் வேலையா? அதுவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானில் இருந்து வருகிற எழுத்தாளர்களின் வியூகத்தையும் கேட்டு கொள்வது என்பதெல்லாம் என்ன மாதிரியான நியாயமோ?
நமது தேசத்தின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல், அதற்கான வியூகங்கள் வகுப்பது எல்லாம் ரகசியமான ஒரு நடவடிக்கை என்பதுதானே பிரதமர் மோடியின் கருத்து. அவரது கருத்தை மீறிச் செயல்படுகிறாரா தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் என்பதும் விடைதெரியாத கேள்வி.
அஜித் தோவலின் மகன் ஆதாயம் அடைவதற்காக நாட்டின் பாதுகாப்பை பொதுவெளியில் கூவி கூவி ஏலம் போடுவதற்கு கடிவாளம் எவர்தான் போடுவதோ?