பதன்கோட்டில் வீர மரணம் அடைந்த நிரஞ்சனின் உடல் கேரளாவில் தகனம்
பாலக்காடு: பதன்கோட் தாக்குதலில் பலியான லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சனின் உடல் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதியின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்கையில் குண்டு வெடித்து வெடிகுண்டு நிபுணர் குழுவின் தலைவரான தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூருக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் நேற்று கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை அவரது உடல் எலம்பச்சேரியை அடைந்தது. அங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நிரஞ்சனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஊரே கூடி அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பியது.