அம்மா உணவகம் போல்... ஆந்திராவில் என்.டி.ஆர் அண்ணா உணவகம்
அமராவதி: தமிழகத்தில் அம்மா உணவகம் போல், ஆந்திராவில் மலிவு விலையிலான என்டிஆர் அண்ணா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ் படங்களை மட்டும் ரீமேக் பண்ண மாட்டோம் என்று கூறும் விதமாக தமிழகத்தின் அம்மா உணவகம் போல் ஆந்திர மாநிலத்தில் என்டிஆர் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தெலுங்கானாவுக்கு சென்று விட்டது. அதே சமயம், ஆந்திர மாநிலத்தை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன் தலைநகராக அமராவாதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தற்காலிக தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியில் என்டிஆர் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
ஆந்திர மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்த மறைந்த நடிகர் என்டிஆர், ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவரது பெயரில் தான் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் காலை நேரத்தில் இட்லி, பொங்கல் சாம்பார், மதிய வேளைகளில் எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
என்டிஆர் அண்ணா உணவகம் முதல்கட்டமாக 29 கிராமங்களிலும், அடுத்தடுத்து மாநிலம் முழுவதிலும் என்டிஆர் உணவகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.