தீவிரவாதிகள் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து முறியடிப்பது எப்போது?
பெங்களூரு: அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீவிரவாதிகள் தங்களது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இவற்றை முன்னரே கண்டறிந்து முறியடிக்கும் வலுவான அதிநவீன தொழில்நுட்பங்களை உளவுத்துறை அமைப்புகள் கையாள வேண்டியது அவசியம் என்கிறார் பாதுகாப்புத் துறை வல்லுநர் வி. பாலச்சந்திரன்.
மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதிய்8அன்று பயங்கரவாத தாக்குதலை நடத்தி 160க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட தீவிரவாதிகள் அதிநவீன தொலைத் தொடர்பு முறைகளையே பயன்படுத்தியிருந்தனர். அதனை நாம் முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடித்திருந்தால் இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
நமது உளவுத்துறை அமைப்புகளின் தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து மும்பை தாக்குதல் விசாரணையில் இடம்பெற்றிருந்த பாதுகாப்புத் துறை வல்லுநர் வி. பாலச்சந்திரன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: இந்திய உளவுத்துறை எப்படி வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டாகால் (VoIP) எனப்படும் தீவிரவாதிகளின் அதிநவீன தகவல் தொடர்பு முறையை கண்காணிக்காமல் போனது?
பதில்: இத்தகைய நவீன தொழில்நுட்பத்தை தகவல் தொடர்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கவில்லை. வெளிநாடுகளில் 2004ஆம் ஆண்டு முதல் இத்தகைய தொழில்நுட்பம் வர்த்தக பயன்பாட்டில் முழு வீச்சில் பயன்படுத்தப்படுகிறது. இருந்த போதும் நாம் அதை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.
அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ. அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நன்கு அறிந்திருந்தனர். மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வெளிநாட்டு செல்போன் எண்களை எப்படி பயன்படுத்தினர் என்பதை நாம் நீண்டகாலம் கழித்தே கண்டறியவும் முடிந்தது.
கேள்வி: இப்படியான தோல்விக்கு என்ன காரணம்?
பதில்: இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களை வெளியில் இருந்து கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால் அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தாமலேயே கிடப்பில் கிடக்கிறது.
கேள்வி: இது போன்ற விவகாரத்தில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்.டி.ஆர்.ஓ. இன்னும் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும் அல்லவா?
பதில்: நிச்சயமாக இது போன்ற பலவீனங்களுக்கும் தோல்விகளுக்கும் முழு பொறுப்பே தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்.டி.ஆர்.ஓ.தான். தீவிரவாதிகளின் தொலை தொடர்புகளை முழுமையாக கண்காணிக்க வேண்டியது இந்த அமைப்புதான்.
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி உள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளே கூட தீவிரவாத தாக்குதலை தடுக்க முடியாமல் போயுள்ளது. இத்தனைக்கும் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் கண்டதாக பிரான்ஸ் தெரிவித்திருந்த போதும் பாரீஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மேற்குலக நாடுகளின் தொழில்நுட்ப முறைகளை நாமும் பின்பற்றுகிறோம். இருப்பினும் நாம் இதில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
மேலும் தீவிரவாதிகளின் இணையம் செயல்பாடுகளைக் கண்காணிக்க அதிகாரிகள் கூடுதல் தேவை என மலைத்து போய்விடக் கூடாது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆன்லைன் மூலமாக மும்முரமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக உளவாளிகளை பின் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதைக் காட்டிலும் இத்தகைய இணையம் வழி தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அனைத்து நாடுகளின் உளவு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.