அணு ஆயுதங்களுடன் எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணை… அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி
பாலாசோர் : அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 4,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி அடைந்துள்ளது.
ராணுவ பலப்படுத்த அதிகரிக்க அதிநவீன ஏவுகணைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்னி ரக ஏவுகணைகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது அக்னி-4 அதிநவீன ஏவுகணை சோதனை அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அக்னி-4 ஏவுகணை மீண்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த ஏவுகணை திட்டமிட்டபடி எதிரி இலக்கை தாக்கி அழித்தது.
இதன்மூலம் அக்னி-4 ஏவுகணை சோதனை மீண்டும் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அக்னி 4 ஏவுகணை 4,000 கி.மீ. தூரம் பறந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது. அத்துடன், இதில் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்ல முடியும்.
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்டதாகும். நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஏவுகணை 7-வது முறையாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 2-ம் தேதி அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இதே இடத்தில் இருந்து அக்னி-4 ஏவுகணை சோதனை நடத்தப் பட்டது.