‘அக்னி நாயகன்’ அவினாஷ் சந்தரின் திடீர் நீக்கம்: டிஆர்டிஓவுக்கு புதிய தலைவராகிறார் சேகர்பாசு?
டெல்லி: மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் புதிய தலைவராக, சேகர் பாசு நியமிக்கப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னி ஏவுகணையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவரான அவினாஷ் சந்தர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார்.
அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கியது மோடி அரசு. இது தொடர்பாக அவினாஷ் சந்தர் கூறுகையில், ‘ நான் ஏன் நீக்கப்பட்டேன் என்பது குறித்து ச்னக்குத் தெரியவில்லை. எனவே அதுகுறித்து நான் பேச மாட்டேன். இது அரசின் உரிமை. அதை அவர்கள் செய்துள்ளனர். அக்னி ஏவுகணைத் திட்டம் எனது வாழக்கையில் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்' என்றார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக் கமிட்டி, சந்தர் நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 31ம் தேதியுடன் அவரது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளவும் கமிட்டி முடிவு செய்துள்ளது.
எனவே, டிஆர்டிஓ அமைப்பின் புதிய தலைவராக சேகர் பாசு நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இவர், பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனராக தற்போது உள்ளார்.
இதற்கிடையே, அவினாஷ் சந்தர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப் பட்ட விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ‘மிக உயர்ந்த பதவியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவர் பதவியில் நீடிப்பதை அரசு விரும்பவில்லை. இப்பதவிக்கு தகுதியுடைய ஏராளமானோர் தயாராக உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இளம் விஞ்ஞானியை அப்பதவியில் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது' என மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.