ஐசியூ இல்லாட்டி ஆபரேஷனே பண்ணக் கூடாது.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பிஜய் குமார் சின்ஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கொல்கத்தாவில் உள்ள ஒரு நர்சிங்ஹோமில் தனது மனைவியை அனுமதித்திருந்தேன். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனது மனைவி இறந்து போய் விட்டார். டாக்டர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை என்று கூறியிருந்தார்.
23 ஆண்டு கால சட்டப் போராட்டம்
இது 23 ஆண்டு கால சட்டப் போராட்டமாகும். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் முட்டி மோதிய பிஜய் குமார் சின்ஹா. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருந்தார். விசாரணைக் காலத்திலேயே அவர் இறந்தும் போய் விட்டார். அவரது மகன் செளமிக் வழக்கை நடத்தி வந்தார்.
நீதி கிடைத்தது
இந்தப் போராட்டத்தில் தற்போது நீதி கிடைத்துள்ளது பிஜய் குமார் குடும்பத்திற்கு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை தர உத்தரவிட்டது.
ஐசியு இல்லாவிட்டால் ஆபரேஷனே கூடாது
ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை வசதிகள் இருந்தால் அங்கு நிச்சயம் தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆபரேஷனே செய்யக் கூடாது.
டாக்டர் மீது நடவடிக்கை இல்லை
அதேசமயம், மருத்துவர் தரப்பில் கவனக்குறைவு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனவே மருத்துவர் மீதான புகார் கைவிடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.