பத்வா பிரச்சினையில்லை.. இஸ்கான் ரத யாத்திரையில் வளையல், குங்குமம் அணிந்து பங்கேற்ற எம்.பி. நுஸ்ரத்
கொல்கத்தா: மத ரீதீயான சர்ச்சைகளுக்கு நடுவே, இஸ்கான் அமைப்பின் விழாவில் பங்கேற்ற, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், அனைத்து மதங்களும் ஒற்றுமை மற்றும் அமைதியைப் பற்றி பேசுகின்றன என கூறியுள்ளார்.
நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலம் பஷிராத் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிரபல நடிகை, நுஸ்ரத் ஜஹான். பிறப்பால் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த மாதம், நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை மணமுடித்தார்.
இவர்கள் திருமணம் துருக்கியில் வைத்து விமரிசையாக நடைபெற்றது. இதன்பிறகு, தாமதமாகத்தான் லோக்சபா வந்து, எம்பியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
எப்படி இருந்த கட்சி... திமுகவின் முப்பெரும் தலைவர்கள் இனி இவர்கள்தான்!
பதவிப் பிரமாணம்
பதவி பிரமாணம் செய்ய வந்த தினம் முதல், இதுவரை நாடாளுமன்றத்திற்கு, குங்குமம் அணிந்தபடியும், இந்துக்களை போன்ற தாலி அணிந்தபடியும்தான் நுஸ்ரத் ஜஹான் வந்தார். இதையடுத்து அவருக்கு பத்வா விதித்து இஸ்லாமிய அமைப்பு உத்தரவிட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இஸ்கான் அழைப்பு
இந்த நிலையில், கொல்கத்தாவில், சர்வதேச கிருஷ்ணா விழிப்புணர்வு சமூகம் (Iskcon) இந்து அமைப்பு இன்று நடத்திய 48வது ரத யாத்திரையில், நுஸ்ரத் கலந்து கொண்டார். இந்த ரத யாத்திரையை முதல்வர் மமதா பானர்ஜி துவக்கி வைத்தார். நுஸ்ரத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இஸ்கான் அமைப்பு அழைப்புவிடுத்திருந்தது. மதம் தொடர்பான அவரது கொள்கை மற்றும் அனைத்து தரப்பையும் ஏற்று நடத்தும் பாங்கு என்பது, இஸ்கான் வலியுறுத்தும், சமூக நல்லிணக்கம் என்ற கொள்கையுடன் இசைந்துபோவதால் நுஸ்ரத்தை அழைப்பதாக இஸ்கான் தெரிவித்திருந்தது.
வரவேற்பு
இதையடுத்து, நுஸ்ரத், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இஸ்கான் அழைப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இன்றைய ரத யாத்திரை நிகழ்விலும், நுஸ்ரத், தாலி மற்றும் வளையல்களை அணிந்தபடிதான் பங்கேற்றார். இந்து மத சம்பிரதாய சடங்குகளையும் அவர் செய்தார். இதுபற்றி நுஸ்ரத் கூறுகையில், இஸ்கான் நடத்தும் ரத யாத்திரை நிகழ்வில் பங்கேற்க எனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதை அதிருஷ்டமாக நினைக்கிறேன்.
|
அனைத்து மத ஒற்றுமை
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள எல்லா மக்களின் நலனுக்காகவும், நான் ஜெகன்நாதரிடம் வேண்டிக்கொள்கிறேன். கிருஷ்ணர் பவனிக்கும் தேர், மற்றும் இறைவன் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகளை வடிவமைத்ததில், இஸ்லாமியர்கள் பங்களிப்பும் உள்ளது. எனவே, அனைவரும் வந்து, இறைவனின் ரதத்தை இழுக்க வேண்டும் என அழைப்புவிடுக்கிறேன். ஒற்றுமை மற்றும் அமைதியே நமக்கு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.