சுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்
சபரிமலை: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருமுடி ஏந்தி சபரிமலை சென்று இன்று காலை ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தீவிர பக்திமான். ஊரில் ஒரு கோயில் விடாமல் வழிபடுபவர். அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான கோயில் என்றால் கைலாசநாதர் கோயில். அங்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வார். அத்துடன் குலதெய்வ வழிபாட்டிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குல தெய்வத்தை அடிக்கடி தரிசனம் செய்வார்.
அதுமட்டுமின்றி தனது சொந்த ஊரில் உள்ள பல கோயில்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். எப்போதும் அமைதியான சுபாவத்துடன் காணப்படும் ஓ பன்னீர்செல்வம் அப்படி இருக்க இறை நாட்டமும் காரணம் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இன்று இருமுடியுடன் கோயிலை வந்தடைந்தார். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த அவர், அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.