பதவி சுகத்துக்காக மலிவு அரசியலில் இறங்கி விட்டார் ஓபிஎஸ்... அமைச்சர் விஜயபாஸ்கர் சாடல்
ஜெயலலிதா இருந்தபோது மிக உயர்ந்த பதவிகளில் வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம், இன்று பதவி பறிபோய்விட்டதால் மலிவு அரசியலில் ஈடுபட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
டெல்லி: ஜெயலலிதா அவர்களால் உயர் பதவிகள் வழங்கப்பட்டு அழகு பார்க்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், தற்போது பதவி பறிபோனதால் மன குழப்பம் ஏற்பட்டு விரக்தியால் மலிவு அரசியலில் ஈடுபட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாடினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாலும், அவரது மருத்துவ அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாலும் அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று இன்று தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை விடுப்பதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் , மரணம் குறித்தும் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.
ஜெயலலிதா அவர்கள், ஓ.பன்னீர் செல்வத்துக்கு பல்வேறு உயரிய பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர். தற்போது அந்தப் பதவிகள் அனைத்தும் பறிபோனதால் மனகுழப்பம் ஏற்பட்டு விரக்தி அடைந்ததால் இத்தகைய தரம்தாழ்ந்த அரசியலில் ஓ.பன்னீ்ர செல்வம் ஈடுபடுகிறார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19-ஆவது நாளே முழு அதிகாரத்தையும் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். எனவே ஜெயலலிதாவின் சிகிச்சையில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு முழு பொறுப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்குத்தான் உண்டு. எனவே இந்த பிரச்னையில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம்தான் என்றார் அவர்.