மைத்ரேயனுக்குதான் அப்பாயின்ட்மென்ட்.. ஓபிஎஸ்சுக்கு இல்லை.. பப்ளிக்காக அறிவித்த நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு நேற்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். இதுகுறித்து பல்வேறு யூகங்கள் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதை மறுத்த பன்னீர்செல்வம், இன்று மதியம் 2 மணியளவில் டெல்லியில் பேட்டியளித்தபோது, தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்துள்ளதாக கூறினார்.
தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தந்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்தேன் என்றார் பன்னீர் செல்வம்.
ஆனால், இந்த பேட்டி வெளியான சுமார் 45 நிமிடங்களில், இதை நிர்மலா சீதாராமன் அலுவலக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மறுத்துள்ளது. அதில், ராஜ்யசபா எம்.பி மைத்ரேயனுக்குதான் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்ததாக பன்னீர் செல்வம் கூறிய நிலையில், அமைச்சர் அலுவலகமோ, அவருக்கு அப்பாயின்ட்மென்ட்டே தரவில்லை என ட்வீட் செய்துள்ளது. இதை ட்வீட் செய்து கூற வேண்டியதன் நோக்கம் என்ன என்ற கேள்வியும், பன்னீர் செல்வம் ஏன் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை தூக்கச் செய்துள்ளது.