இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.. தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் கோரிக்கை
குழப்பம் நிலவுவதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர், மைத்ரேயன் தலைமையிலான, ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுக எம்.பிக்கள்.
டெல்லி: அதிமுக எம்.பி மைத்ரேயன் தலைமையிலான எம்.பிக்கள் குழு, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து, அதிமுகவின், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது.
கடந்த டிசம்பர் 29ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது சட்டவிரோதமானது என பன்னீர் செல்வம் தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று உள்ள சசிகலா தன்னுடைய அக்காள் மகனும் அதிமுகவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்து உள்ளார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க நேரம் கோரினர். தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியதை அடுத்து அவர்கள் இன்று பிற்பகல் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது மைத்ரேயன் உள்பட 10 எம்.பிக்கள், பி.எச் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அதிமுக கட்சி விதிமுறைகள் படி, சசிகலா நியமனம் செல்லாது என்பதை அவர்கள் எடுத்துக்கூறினர். சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், உள்ளிட்டோரின் நியமனங்கள் செல்லாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி சசிகலா பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது என்றும் அவர்கள் எடுத்து கூறினர். இறுதியாக, குழப்பம் நிலவுவதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிறையிலுள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக இப்படி சிறைக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்பதால் கர்நாடக உள்துறை அமைச்சகம் வாயிலாக நோட்டீஸ் சசிகலாவுக்கு கொண்டு சேர்க்கப்படும்.