கெஜ்ரிவாலுக்கு 'இசட்' பாதுகாப்பு கொடுத்தே தீருவோம்.. காஸியாபாத் போலீஸ்
காஸியாபாத்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இசட் பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என்று கூறினாலும் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பை வழங்குவோம் என்று காஸியாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை முதல் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் காஸியாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை சிறப்பு எஸ்பி தர்மேந்திரா சிங் கூறுகையில், 30 போலீஸார் இரவு பகலாக கெஜ்ரிவாலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போதிலும் நாங்கள் இசட் பிரிவின் கீழ் 24 மணி நேரப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்றார்.
காஸியாபாத்தில் உள்ள கிர்னார் குடியிருப்பில்தான் கெஜ்ரிவால் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இன்னும் அவர் டெல்லிக்கு இடம் பெயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் வீட்டுக்கு வெளியே 2 ஏட்டுக்கள், எட்டு கான்ஸ்டபிள்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் பாதுகாப்புப் பணியில் மேலும் 2 காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவருக்கு 2 எஸ்கார்ட் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் போகும் இடமெல்லாம் இவையும் கூடவே போகும். அதில் 2 ஏட்டுக்கள், 6 கான்ஸ்டபிள்கள் இருப்பார்கள். கையில் நவீன துப்பாக்கிகளுடன் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட பாதுகாப்பெல்லாம் தனக்குத் தேவையில்லை என்று முன்னதாக நிராகரித்திருந்தார் கெஜ்ரிவால். இருப்பினும் காஸியாபாத் போலீஸார் அந்தப் பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.