கமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்... தமிழக அரசியலை கேட்டறிந்த நவீன் பட்நாயக்
Recommended Video
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக நவீன் பட்நாயக்கை நேற்று கமல் சந்தித்து பேசிய போது, தமிழக அரசியல் பற்றி அவர் ஆர்வமுடன் கமலிடம் கேட்டறிந்தாராம்.
அரசியல் பேச்சு
நேற்று முன் தினம் சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று காலை ஒடிசாவுக்கு சென்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல். அங்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசிய கமல், தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினாராம். அதை ஆர்வமுடன் கேட்ட நவீன் பட்நாயக் கமலுக்கு சில அறிவுரைகளை வழங்கி அதன்படி செயல்பட அறிவுறுத்தியுள்ளாராம்.
ஜெ. தோழி
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஜெயலலிதாவுடன் தோழமை பாராட்டியவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் எப்படி இருக்கிறது, ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து நவீன் கமலிடம் கேட்டறிந்துள்ளார். அப்போது கமல் அளித்த பதிலைக் கேட்டு அவர் ரொம்பவே வருத்தப்பட்டாராம்.
செஞ்சூரியன் பல்கலை
இந்நிலையில் ஒடிசாவில் பிரசித்தி பெற்ற செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமல்ஹாசனுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட நவீன் பட்நாயக் கமலுக்கு தனது கரங்களால் அந்த பட்டத்தை வழங்கி வாழ்த்தினார். சினிமா, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் கமலின் பங்களிப்பை பாராட்டி இந்த பட்டம் தரப்பட்டுள்ளது.
வாய்ப்பிருந்தால்
மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படும் மாநில அளவிலான மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படும், அப்போது நீங்கள் பங்கேற்க வேண்டும் என கமல் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரும் வாய்ப்பிருந்தால் தவறாது கலந்து கொள்கிறேன் என உறுதியளித்துள்ளாராம்.