கொரோனா கட்டுப்பாடு.. ஒடிசா மாநில முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.472 கோடி ஒதுக்கீடு
புவனேஸ்வர்: கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஒடிசா மாநில அரசு, முதல்வரின் நிவாரண நிதியின்கீழ் கொரானா நோய் தொற்றுக்கு எதிராக 472.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து, கூடுதலாக செலவிடப்பட்ட தொகை இது என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா மேலாண்மைக்காக ஒடிசா மாநில அரசு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளது.
முதல்வரின் நிவாரண நிதியில் ஒதுக்கப்பட்ட பணம், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பது, மற்றும் மேலாண்மை செய்வதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாநில காவல்துறையினர் நலனைப் பாதுகாப்பது, தொழிலாளர் சிறப்பு ரயில்களுக்கான ரயில் கட்டணத்தை செலுத்துவது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, போக்குவரத்து செலவு, நேபாளம் நாட்டில் சிக்கித்தவித்த தொழிலாளர்களை மீட்டு வருவதற்கான செலவு, கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வார்டு மட்டத்திலான குழுக்களுக்கு செலவிடப்படும் தொகை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
வெளிமாநிலங்களில் இருந்து திரும்பி வந்த தொழிலாளர்களை தனிமைப் படுத்துவதற்காக ஒடிசா மாநில அரசு பல ஏற்பாடுகளை செய்தது. இவ்வாறு தனிமைப்படுத்துதல் காலத்தில் அரசு கூறும் மையங்களில் தங்கியிருப்பதற்கு ஊக்கத் தொகையாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்வரின் நிவாரண நிதியில் பெரும் பங்கு இதற்கு செலவாகியுள்ளது.
தனிமைப் படுத்துதல் வசதிகளுக்காக பஞ்சாயத்து ராஜ் துறை மூலமாக நிதி கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. எனவே பஞ்சாயத்து ராஜ் துறைக்கு, 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 7 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி தலா ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. 135 கோடி ரூபாய் இதற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் நலன் மேம்பாட்டுக்காக 15 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. நகர்ப்பகுதிகளில் சாலையோர கடைகள் வைத்திருந்தவர்கள் உதவிக்காக 19 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலமாக அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்கரை ரயில்வேயில் மண்டலத்துக்கு ஒடிஸா மாநில அரசு 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 46 ஆயிரம் வார்டு கமிட்டிகளுக்கு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்கும் வகையில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவாகிறது.