ஒடிஷா முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே. பாண்டியன் இல்லம் மீது பாஜகவினர் தாக்குதல்
ஒடிஷா முதல்வரின் தனிச் செயலாளர் பாண்டியனின் இல்லம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
புவனேஷ்வர்: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் வி. கார்த்திகேய பாண்டியன் இல்லத்துக்குள் நுழைந்து பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்துக்கு நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் பிஜேபூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 24-ந் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் நவீன்பட்நாயக் கார்த்திகேய பாண்டியன், ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக ஒடிஷா மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார் மனுவும் கொடுத்தனர். அதில் கார்த்திகேய பாண்டியன், அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்; அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் புவனேஸ்வரில் கார்த்திகேய பாண்டியன் வீட்டுக்குள் நுழைந்த பாஜக கும்பல் மாட்டு சாணத்தை வீசியது. பூந்தொட்டிகளை சூறையாடி வாகனங்களை அடித்து நொறுக்கியது.
இத்தாக்குதல் சம்பவத்துக்கு முதல்வர் நவீன்பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஒடிஷா மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.