பூரியில் சர்வதேச விமான நிலையம்- பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை
புவனேஸ்வர்: பூரியில் (புரி) சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் எழுதியுள்ள கடிதம்:
பூரியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விமான நிலையத்துக்கு ஶ்ரீ ஜெகந்நாத் (ஜெகநாத்) சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள பூரி ஜெகநாதர் பக்தர்கள் வந்து செல்வதற்கு இந்த விமான நிலையம் உதவியாக இருக்கும். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் வழங்குவதற்கு ஒடிஷா அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பூரி சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய தயாராக உள்ளது. சிலிக்கா ஏரி மற்றும் பிதர்கனிகா தேசிய பூங்கா ஆகியவை பூரி அருகே உள்ளன. சர்வதேச சூழல் சுற்றுலாதுறையில் இரண்டும் முக்கிய இடம்பிடித்தவை.
பூரி கடற்கரையும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் முதன்மை தேர்வாகவும் உள்ளது. பூரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது பாரதீப் துறைமுகத்தையும் அஸ்தரங்காவையும் இணைக்கக் கூடியது. பொருளாதார ரீதியாக இவை இரண்டும் முக்கியமானவை. ஆகையால் பூரி சர்வதேச விமான நிலையமானது ஆன்மீக சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.