ஒடிசா சட்டசபைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சஸ்பெண்ட்
புவனேஸ்வர்: சட்டசபைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில், ஒடிசா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ நபகிஷோர் தாஸ் 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடந்தபோது, செல்போனில் ஆபாச வீடியோவை தாஸ் பார்த்ததாக உள்ளூர் டிவி சேனல் ஒன்று காட்சிகளை ஒளிபரப்பியது.
இந்த பிரச்சினை சர்ச்சையை ஏற்படுத்தியதால், இன்று முதல் 7 நாட்களுக்கு நபகிஷோரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ கூறுகையில், நான் இணையத்தை பயன்படுத்தியது உண்மை. ஆனால் ஆபாச வீடியோ பார்க்கும் நோக்கத்தில் அதை செய்யவில்லை. அது திடீரென ஓபன் ஆகிவிட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதேநேரம், ஆளும் பிஜு ஜனதாதளம் மற்றும் பாஜக கட்சிகள், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்தபோது, அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ண பாலிமர், சி.சி.பாட்டீல் ஆகியோர் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள்தான் அதை அம்பலப்படுத்தின.
இதையடுத்து, அம்மூன்று அமைச்சர்களும் பதவியை இழந்தனர். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு, காமிரா மேன்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டனர். அப்போதும், அமைச்சர்கள் மூவரும், ஒடிசா எம்.எல்.ஏ நபகிரோஷரை போலவே, தானாக ஆபாச வீடியோ ஓபன் ஆகிவிட்டதாக காரணம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஆங்காங்கு சில சட்டசபைகளில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் அரங்கேறிவருகின்றன. இதன் லேட்டஸ்ட் உதாரணம் ஒடிசா சட்டசபை.