ஒடிஷாவில் அவலம்: ஆம்புலன்ஸ் மறுப்பு- கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றைக் கடந்த உறவினர்கள்
ஒடிஷாவில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.
ராயகடா: ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் உறவினர்கள்.
ஒடிஷா மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. இதனால் பழங்குடி இனமக்கள் பெருமளவில் வாழும் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்தவர் சடலங்களை பல கிலோ மீட்டர் சைக்கிளிலும் தோளிலும் சுமந்து செல்லும் அவலக் காட்சிகள் ஒடிஷாவில் அதிகம் அரங்கேறுகின்றன. இப்போது ராயகடாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராயகடா மாவட்டம் கல்யாண்சிங்பூர் தாலுகாவில் தலசாஜா கிராமத்தைச் சேர்ந்த அன்கு மினியகா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கல்யாண்சிங்பூரில் ஆம்புலன்ஸ் உதவி கோரியுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து கொண்டே கரைபுரண்டோடிய நகபாலி ஆற்றை கடந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பெண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் சுமந்தபடி ஆற்றை கடக்கும் படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செயய்ப்பட்டு வருகின்றன.