கொரோனா: ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு! நாட்டிலேயே முதலாவது மாநிலம்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்துள்ளார். நாட்டிலேயே லாக்டவுன் காலத்தை நீட்டித்து அறிவித்திருக்கும் முதல் மாநிலம் ஒடிஷா.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் ஏப்ரல் 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் லாக்டவுனை நீட்டிக்கலாமா? என்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திலும், லாக்டவுனை நீட்டிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதையே பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே பல மாநிலங்கள் லாக்டவுன் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. இதனிடையே லாக்டவுன் காலத்தை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒடிஷா அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக கூறிய ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தற்போதைய சூழ்நிலையில் ஒடிஷாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். மத்திய அரசு அறிவிக்கும் முன்னரே லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலாவது மாநிலம் ஒடிஷா.
பிற மாநிலங்களும்?
மத்திய அரசு முடிவை அறிவிக்கும் முன்னரே ஒடிஷாதான் லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. அனேகமாக ஒடிஷாவை பின்பற்றி பிற மாநிலங்களும் லாக்டவுன் காலத்தை நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.