ஒடிஷாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கான பணிகள் மும்முரம்!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாநில அரசு படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்களும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதனடிப்படையில் ஒடிஷா மாநிலமும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒடிஷாவைப் பொறுத்தவரையில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணி ஓராண்டுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2 டோஸ்களாக இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளது. ஆகையால் கொரோனா தடுப்பு மருந்துகளை 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வைப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஒடிஷா மாநில கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) பிரதிபா குமார் மொகபத்ரா கூறியதாவது: சீரம் நிறுவனத்தின் கோவி ஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிV தடுப்பூசியும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு தயாராக உள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் கொரோனாவை கட்டுப்படுத்தும் 58 தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. 203 தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய நிலையில் உள்ளன.
பெரும்பாலான கொரோனா தடுப்பு மருந்துகள் 2 செல்சியஸ் டிகிரி முதல் 8டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்பட வேண்டியவை. இவ்வாறு பிரதிபா குமார் மொகபத்ரா கூறினார். மேலும் சுமார் கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்காக 2,900 மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து பெறுவோர் வந்து காத்திருக்கவும், மருந்து செலுத்தவும், கண்காணிக்கவும் என 3 கட்டங்களாக அமைக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான சமூக இடைவெளியைப் பின்பற்றி அமைக்கப்படுகின்றன. 200 பயனாளிகளுக்கு 5 பணியாளர்கள் என்ற அடிப்படையில் செயல்பட உள்ளனர். ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், மருத்துவ பணியாளர் இந்த குழுவில் இருப்பர் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த மையங்களின் பாதுகாப்பு அதிகாரியாக போலீசார் அல்லது ஊர்க்காவல் படை அல்லது என்.எஸ்.எஸ்., என்.சி.சி. அமைப்புகளில் ஒருவர் இருப்பார். இவர்கள் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைப்பார். அவருக்கு உதவியாக கூட்டத்தை ஒழுங்குபடுத்த 3 அல்லது 4 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்கின்றன அரசு வட்டாரங்கள்.