ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி.. பதிவு செய்ய வெப்சைட்.. நவீன் பட்நாயக் அசத்தல்
புவனேஸ்வர்: முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு, ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு வசதியாக, இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வெப்சைட் மூலம், ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ஊக்கத்தொகை பெற முடியும்.
ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதற்காக சுமங்கல் என்ற பெயரில் ஒடிசா அரசால் போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று பட்நாயக் நம்புகிறார்.
இந்த போர்ட்டலை எஸ்.டி மற்றும் எஸ்சி வளர்ச்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், இதுபோன்ற திருமணங்களுக்கான ஊக்கத்தொகையை பட்நாயக் அரசு ரூ .1 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊக்கத் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தம்பதியினரின் கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். திருமணமான மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அவர்கள் அந்தத் தொகையை எடுக்க முடியும்.
பயனாளிகளின் வருவாய் வரம்பு எதுவும் இதில் கணக்கிடப்படாது. 2017-18 நிதியாண்டில், 543 தம்பதிகள் இந்த பலனைப் பெற்றனர். மாநில அரசு ரூ .2.65 கோடியை ஊக்கத்தொகையாக செலவிட்டது.
ஊக்கத்தொகைக்கு தகுதி பெற, திருமணங்கள் செல்லுபடியாகும் வகையில் இந்து திருமணச் சட்டம், 1955 இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 341 வது பிரிவின்படி, வாழ்க்கைத் துணையில் ஒருவர் பட்டியலின சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் உயர் சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மற்றொருவர் பட்டியலினத்தவராக இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை முதல் முறையாக திருமணம் செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே. இருப்பினும், கணவர் அல்லது மனைவியை இழந்தவர்களும் உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்களாவர். ஊக்கத்தொகை நிலம் வாங்குவதற்கோ, தொழிலைத் தொடங்குவதற்கோ, பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒடிசா அரசு ஒருங்கிணைந்த மற்றொரு போர்ட்டலையும் அறிமுகப்படுத்தியது. இது தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுவதோடு உதவித்தொகை பெற சிரமமின்றி அணுகவும் உதவும். 11 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாணவர்கள் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.