மகாத்மா காந்தி எப்படி இறந்தார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்
புவனேஸ்வர்: ஒடிசா மாநில அரசு பள்ளிகளுக்கு தயாரித்த புக்லெட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி இறப்பு என்பது தற்செயலாக நடந்த விபத்து என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தவறை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் இதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒடிசா அரசு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு பக்கத்திற்கு அரசு பள்ளி மாணவர்களுக்காக கையேடு (புக்லெட்) தயாரித்து விநியோகித்தது. அதில் மகாத்மா காந்தியின் போதனைகள், அவருடைய சுதந்திர போராட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு இருந்தது.
மகாத்மா காந்தி இறப்பு
அத்துடன் அந்த கையேட்டில் மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா ஹவுசில் 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தற்செயலாக நடந்த சம்பவத்தால் இறந்து போனதாகவும் விபத்து என்பது போலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வலியுறுத்தல்
இது தொடர்பாக ஒடிசாவில் பெரும் சர்ச்சை உருவானது. பல்வேறு அரசியல் கட்சிகள் நவீன் பட்நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. உடனே இந்த மோசமான தவறை சரி செய்ய வேண்டும்என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
நவீன் பட்நாயக் உத்தரவு
இதனிடையே ஒடிசா மாநில கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட கையேட்டில் (புக்கெலட்) எப்படி மகாத்மா காந்தி குறித்து தவறான தகவல் இடம் பெற்றது என்பது குறித்து விசாரணைக்கு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கொதிப்பு
இதனிடையே இந்த பிழையை "மன்னிக்க முடியாத செயல்" என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நரசிங்க மிஸ்ரா, முதல்வர் நவீன் பட்நாயக், அரசின் தலைமை பொறுப்பு வகிப்பதால், கையேட்டில் வழங்கப்பட்ட தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வெறுப்பாளர்களை மகிழ்விக்க
அத்துடன் மகாத்மா காந்தியைக் கொன்றது யார், அவர் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவற்றை அறிய குழந்தைகளுக்கு ஒவ்வொரு உரிமையும் உண்டு என்றும், ஆனால் தேசத்தின் தந்தையின் மரணம் அவரது வெறுப்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது" என்றும் வேதனையுடன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.